இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து விளக்கிப் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.
ராஜமெளலி இயக்கத்தில் படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம், கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனையடுத்து ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இயக்குநர் ராஜமெளலி அமெரிக்கா சென்றுள்ளார்.
முன்னதாக 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இந்து மதம் குறித்த சித்தரிப்பு அதீதமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற ராஜமெளலி, இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ''பலரும் இந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல; இன்றைய காலக்கட்டத்தில் தான் அது மதம். ஆனால், இந்து மதத்திற்கு முன்பு அது இந்து தர்மமாக இருந்தது.
இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை; அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் இந்து அல்ல. அதே சமயம் இந்து தர்மம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர இந்துதான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் இந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 'காண்டம் அதிகம் பயன்படுத்துவது நாங்கள்தான்'- மோகன் பகவத் கருத்துக்கு ஒவைசி பதிலடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/7CblZA9
0 Comments