Ad Code

Responsive Advertisement

‘ஜெய்பீம்’ பட விவகாரம் - சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து

‘ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தியதாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

நடிகர் சூர்யா தயாரித்து நடித்து, த.ச. ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுப்படுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுப்படுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த மே மாதம் 17-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

image

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்தப் புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது எனவும் கடந்த ஜூலை 18-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ‘ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தியதாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/5ZyaOgW

Post a Comment

0 Comments