
”பாதிக்கப்பட்டவர்களின் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை” என்று கூறியிருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான்.
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு ’குருப்’, ‘ஹே சினாமிகா’, ‘சல்யூட்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குநர் பால்கியின் த்ரில்லர் படம், செளபின் சாகிரின் புதிய படம் என நடித்து வருகிறார் துல்கர்.
இதில், கேரளாவையே கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் ‘குருப்’ வரும் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில், படம் குறித்து துல்கர் பேசும்போது,
"இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்து தான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார். எப்படியாவது இந்தப்படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் சில வருடங்கள் முன் ‘குரூப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று சொன்னார். திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்தை பண்ணவேண்டும் அப்போதுதான் முடிவு செய்தோம். குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை! ஆனால் விக்டிம் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.

படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக்காட்டினோம். உங்களுக்கு தவறாக எதாவது தோணினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்தப்படத்திற்குப்பின் கடும் உழைப்பு இருக்கிறது. மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகு தான் திரைக்கதையெய் அமைத்தேன். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தை கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்த கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம். ‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/308LiPY



0 Comments