கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், ரவீணா ரவி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் மலையாள சினிமாவின் மூத்த மற்றும் உச்ச நட்சத்திரமான மோகன் லாலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் வேலைகளெல்லாம் படு மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 12ம் தேதியன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் அவரது கதாப்பாத்திரமான முத்துவேல் பாண்டியனின் புரோமோவை அதிரடி பின்னணி இசையுடன் வெளியிட்டது படக்குழு.
இதுபோக ரஜினியின் காட்சிகளே 75 சதவிகிதம் எடுக்கப்பட்டுவிட்டதாகவும், படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கான திட்டத்திலும் படக்குழு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தை தரமாக கொடுக்கவேண்டும் என இயக்குநர் நெல்சன் ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் என்றும், தினமும் நான்கு மணிநேரம்தாம் தூங்கவே செய்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட ரஜினி, நெல்சனிடம் “ஆரோக்கியத்தை பாத்துக்கங்க. ரொம்ப சிரமப்பட வேண்டாம். கரெக்ட்டா பண்ணுங்க. ஓடுற படம் கண்டிப்பா ஓடும். தைரியமா இருங்க” என அறிவுரை கூறியிருக்கிறாராம்.
ஏனெனில் கடைசியாக வந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததாலும், தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன் லால் என உச்ச நட்சத்திரங்கள் இருப்பதாலும் நெல்சன் ஜெயிலர் படத்தின் மீது அதீத கவனத்துடன் இருக்கிறார் என பார்த்து பார்த்து உருவாக்கி வருகிறார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையறிந்த ரசிகர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெல்சன் சம்பவம் லோடிங் என்று குறிப்பிட்டு நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் ஜெயிலர் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/lV1prkP
0 Comments