Ad Code

Responsive Advertisement

”என்ன குறை.. என்ன குறை.. அவதார் 2 படத்தில் என்ன குறை..” Avatar The Way of Water விமர்சனம்!

ஜேக் சல்லியின் குடும்பத்திற்கும், அவரைச் சார்ந்திருக்கும் பாண்டாரோ மக்களுக்கும் மீண்டும் சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன. அதிலிருந்து ஜேக் சல்லி எப்படி தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார் என்பதே அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒன்லைன்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னர், புதியதொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார் ஜேம்ஸ் கேமரூன். மனிதன் Vs ஏலியன் கான்செப்ட்டில் மனிதன் செய்யும் அதிகார அத்துமீறல்களை பட்டியலிட்டு, ஏலியன்களுக்கான தேவதூதனாக ஜேக் சல்லி எப்படி உருவானார் என்பதாக முதல் பாகம் விரியும்.

ஜேக் சல்லிக்கும், காலனல் மைல்ஸுக்குமான இறுதி யுத்தத்தில் நாம் எதிர்பார்க்கும் முடிவு கிடைத்துவிட வேறு வழியின்றி பாண்டாரோ உலகை விட்டு, மீண்டும் பூமி நோக்கி மனிதர்கள் வெளியேற முதல் பாகம் முடிவுறும். காடுகள், மலைகள் என சுற்றித்திரியும் ஜேக் சல்லி காலப்போக்கில் குடும்பம் , குட்டியென செட்டிலாகிவிடுகிறார். ஆனாலும், மனிதர்களின் தொல்லை விட்டபாடில்லை. புதிது புதிதாக அணிகளை அனுப்பி இந்த பாண்டாரோ உலகத்தைக் கைப்பற்ற முயன்றுக்கொண்டே இருக்கிறார்கள்.

image

போதாக்குறைக்கு காலனல் மைல்ஸும் வேறொரு ரூபத்தில் மீண்டும் வந்துவிட, இனியும் காடுகளில் வாழ்ந்தால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்துகொள்கிறார் ஜேக். தன் ஒட்டுமொத்த குடும்பத்துடன் கடல் சார்ந்த Reef people வாழும் Metkayinaவுக்கு சென்று விடுகிறார். புது இடம், புது பிரச்னைகள் , குடும்ப அக்கப்போர்கள் என கலந்துகட்டி இந்த இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.

படத்தின் விசுவல் ட்ரீட்டைக் கடந்து சில கதாபாத்திரங்கள் மட்டுமே நம் மனதில் நிற்கின்றன. கிட்டத்தட்ட ' சூர்ய வம்சம் சரத்குமார்' பாணி உதவாக்கரை மகனாக வரும் லோக் கதாபாத்திரமும், கிரேஸ் அகஸ்டினின் மகளாக வரும் கிரியும், ஸ்பைடர் கதாபாத்திரத்தில் வரும் ஜேக் சாம்பியனும் மனதில் நிற்கிறார்கள். துணை கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட அளவுக்குக்கூட ஜேக் சல்லி, நெய்ட்ரியின் கதாபாத்திரங்கள் எழுதப்படவில்லை என்பதுதான் பெரும் வருத்தம்.

இரு உலகங்களுக்கான சண்டை, பாண்டாரோ உலகில் மட்டுமே கிடைக்கும் அபூர்வ பொருள் என்பதையெல்லாம் விடுத்து இரு நபர்களின் ஈகோ யுத்தம் அளவுக்கு கதை ஒரு கட்டத்தில் சுருங்கிவிடுகிறது. கால்னல் மைல்ஸை க்ளோன் செய்து மீண்டும் மீண்டும் வர வைக்க முடியும் என ஆரம்பித்தேலேயே குறிப்பால் உணர்த்தி விடுவதால், எதிர்மறை கதாபாத்திரமும் வலுவிழந்துவிடுகிறது.

image

டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அது என்ன கதாபாத்திரம் என இறுதியில் வரும் Cast order of apperarence பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. திரைக்கதையாக சற்று டொங்கலாக இருந்தாலும், விஷுவல் ட்ரீட் என்ற ரீதியில் படம் நிச்சயம் ஒரு மைல்கல் தான்.

முதல் பாகத்தில் காடுகளினூடே வித்தியாசமான செடிகள், மரங்கள், விலங்குகள் என நம்மை அதிசயிக்க வைத்த ஜேம்ஸ் கேமரூன், இதில் கடலுக்குள்ளே சென்று வித்தியாசமான நீர் விலங்குகளை கற்பனை செய்திருக்கிறார். 

பெரிய திரையில் அந்தக் காட்சிகளைப் பார்க்க அவ்வளவு பிரமிப்பாய் இருக்கிறது. WETA நிறுவனத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் படத்துக்கு அசுர பலம். கதையில் இன்னமும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால், பிரமாண்டங்களோடு சேர்ந்து ஜீவனும் இந்த அவதாரில் நிச்சயம் இருந்திருக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/D5AL2eT

Post a Comment

0 Comments