Ad Code

Responsive Advertisement

‘சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்கவேண்டும்’ - ‘வெந்து தணிந்தது காடு’ விழாவில் கமல்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆ. ரஹ்மான் இசையில், சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மிகப்பிரம்மாண்டமான அரங்கில் ரசிகர்களின் முன்னிலையில் கோலாகலமாக நேற்றிரவு நடைபெற்றது.

திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் கௌதம் மேனன், “நதிகளில் நீராடும் சூரியன் என தான் முதலில் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு லைன் சொன்னார். ஆனால் அது புது ஹீரோ பண்ணக்கூடிய கதை என்றார். ஆனால் நான் சிம்பு புது ஹீரோபோல் உழைப்பார் என்று ஆரம்பித்தேன். சிம்புவிடம் கதை சொன்ன போது ஓகே சொல்லிவிட்டார். ஏ.ஆர். ரஹ்மான் முதலில் அந்தக்கதைக்கு 3 பாடல்கள் தந்திருந்தார்.

பின் இந்தக்கதை சொன்னபோது புது பாடல்கள் தந்தார். ஐசரி எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். இவர்களால் தான் இந்தப்படம் உருவாகியது. இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் தான் படம். எனக்கு இந்தப்படம் ஒரு புது விசயமாக இருந்தது.

ஜெயமோகன் என்னிடம் பேசும்போது, ஒரு இயக்குநர் அவர் வட்டத்தை விட்டு வெளிவந்து ஜெயித்தால்தான் இயக்குநர், இதில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்றார். ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். இந்தப் படத்திற்கு கதை தந்த போது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப்போவது போல் ஒரு காதலை வைத்துள்ளேன். ஏ.ஆர். ரஹ்மானுக்கும், எனக்குமான உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை சொல்லி பாடல்கள் சொல்லி விவாதிப்பார். வேலை செய்யும் அனுபவமே நன்றாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

image

இந்த விழாவில் இசைமையப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது, “கௌதம் இசைக்காதலன். அவர் எந்த டியூன் தந்தாலும் எடுத்துக்கொள்வார். அதனால் அவரின் நம்பிக்கைக்காக நிறைய உழைப்பேன். நல்ல பாடல்கள் தர முயல்வேன். தாமரை வரிகள் எழுதும்போது அந்த பாடல்கள் ஸ்பெஷலாக மாறிவிடும். கௌதம் படத்தை நன்றாக எடுத்து விடுவார் எனத் தெரியும். அதனால் தான் அவருடன் தொடர்ந்து வேலை செய்கிறேன். அப்புறம் சிம்புவும் பிடிக்கும். அவருக்காகவும் தான் இந்தப்படம் செய்தேன். பாடல்களும் படமும் நன்றாக வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

நடிகர் நாசர் பேசியதாவது, “கௌதம் மேனன் எப்போதும் நிறைய ஆச்சர்யங்கள் தருவார். இந்தப்படத்திலும் கண்டிப்பாக அசத்துவார் என நம்புகிறேன். கௌதம் மேனனிடம் எப்போதும் சிறப்பானது டைட்டில் தான். இந்தப்படத்திலும் டைட்டில் நன்றாக இருக்கிறது. சிம்பு மிக நன்றாக நடிப்பவர். இந்தப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தரும் வாழ்த்துகள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரி பேசியதாவது, “இயக்குநர் கௌதம், சிம்பு, ஏ.ஆர்.ஆர். மூவரும் மிகச்சரியானதொரு வெற்றிக்கூட்டணி. இவர்கள் இணைந்து படம் செய்தால் கண்டிப்பாக அதில் ஏதாவது புதுமையாக இருக்கும். அதிலும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் மிக நல்ல படங்களை தயாரித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

ஆர்.ஜே. பாலாஜி பேசியதாவது, “சிம்பு என் நண்பர். அவர் திறமைக்கு இன்னும் மிகப்பெரிய விசயங்கள் செய்யலாம் என அவரிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இப்போது ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என அவர் நிறைய புதுமையான படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தை கௌதம் மிக நன்றாக இயக்கியிருக்கிறார்.

கௌதம்  இப்பொதெல்லாம் எல்லா படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். எல்லா படங்களிலும் இருக்கிறார். வேல்ஸ் அங்கிள் தன் தந்தை போல், அவருக்கு சினிமா மீது இருக்கும் காதல் மிகப்பெரியது. சினிமா துறையை சேர்ந்த நிறைய பேருக்கு பல உதவிகள் செய்து வருகிறார். நான் கேட்டே பல விசயங்கள் செய்துள்ளார்.  இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் வாழ்த்துக்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

image

நடிகர் ஜீவா பேசியதாவது, “இவ்வளவு பிரம்மாண்டமான விழாவை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ்  தரமான படங்களை தேர்வு செய்து அசத்தி வருகிறார்கள். ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர். கூட்டணி அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி, கண்டிப்பாக படம் புதுமையான ஒன்றாக இருக்கும். கௌதமுடன் வேலை பார்த்திருக்கிறேன், அவர் ஒரு தரமான இயக்குநர். நல்ல படங்கள் செய்யும் ஆர்வமுள்ளவர். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

நடிகை ராதிகா பேசியதாவது, “ஐசரி கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். இன்று இங்கு இரண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ஆர், சிம்பு. சிம்புவை சின்ன வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். அவனை திட்டுவேன் திறமையை வைத்து கொண்டு வீணாக்காதே என்பேன். இந்தப்படத்தில் மிரட்டியிருக்கிறார். நடிப்பில் அசத்திவிட்டார். ஆடியன்ஸ்க்கு நிறைய சர்ப்ரைஸ் இந்தப் படத்தில் இருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாயகி சித்தி பேசியதாவது, “ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரியது. இந்தப்படம் பற்றிய அறிவிப்பு முதலில் வந்தபோது ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர்., கூட்டணியில் நடிக்கும் நாயகி லக்கியஸ்ட் கேர்ள் என நினைத்தேன். அதிர்ஷடவசமாக அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. கௌதம் படத்தில் நாயகியாக நடிப்பது எல்லோருக்கும் கனவு. அவர் படங்களில் நாயகிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். சிம்பு மிகச்சிறந்த நடிகர், அவருடன் நடித்தது மிக அற்புதமான அனுபவம். ஏ.ஆர்.ஆர். என் வாழ்க்கையில் முக்கிய கட்டங்களில் இசையாக உடனிருந்துள்ளார். இந்தப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்று கூறினார்.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசியதாவது, “கமல்ஹாசன் சார் என் கலை குருவாக இருப்பவர். அவர் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. தம்பி சிம்பு இந்தப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, மிக கடினமாக உழைத்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷன்ல் சார்பில் வெளிவரும் படங்கள் நல்ல படங்களாக இருக்கும். இந்தப்படத்தை கௌதம் நன்றாக எடுத்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். அது இந்தப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. உதயநிதி அவர்களுக்கு நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

image

நடிகர் சிம்பு பேசியதாவது, “எனக்கு இந்த மாதிரி பிரம்மாண்ட விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிர;kமாண்டத்தை பார்த்ததும் நம் விழா தானா என சந்தேகம் வந்துவிட்டது. இங்கு கமல் சார் வந்திருக்கிறார். அவர் எனது ‘விண்ணை தாண்டி வருவாயா’ விழாவிற்கு வந்திருந்தார். அந்தப்படம் போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் வேல்ஸ் என்னை மகனை போல் பார்த்து கொண்டார். என் அப்பாவை அமெரிக்க டிரிப் கூட்டிபோனதிற்கு முழு காரணம் அவர் தான்.

கௌதம் வாசுதேவ் மேனனுடன் இது மூன்றாவது படம். நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். ஏதாவது புதிதாக செய்வோம். இந்தப்படத்திலும் அது இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்கள் தான் தருவார். அவருக்கு நன்றி. சித்தி இந்தப்படத்தில் அறிமுகமாகிறார். நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. முதலில் ஒரு காதல் கதை செய்வதாகத்தான் இருந்தது. இந்தப்படத்தில் வேறு ஏதாவது புதுசாக செய்யலாம் என்றேன். அப்போது தான் ஜெயமோகன் கதை வந்தது. இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். படம் பற்றி நாம் பேசக்கூடாது ரசிகர்கள் தான் படத்தை பார்த்து சொல்ல வேண்டும். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது, “சிம்பு மிக திறமைசாலி. சிறு வயதிலேயே அனைத்து புகழையும் பார்த்துவிட்டார். மனதில் ஈரம் அதிகம் உள்ள மனிதர். நல்ல மனதுக்காரார். எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வளர்ந்தவர். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

image

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகப்பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ அது போல், இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம் தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம் தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி.  படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். ‘வேட்டையாடு விளையாடு’ 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டுகொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
  
ஜெயமோகன் எழுத்தில்  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

- பா. ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/q1IVUFt

Post a Comment

0 Comments