நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும், லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாமல், ‘வீரமே வாகை சூடும்’ என்றப் படத்தை வெளியிட தடைக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளதால் இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி, மனு மீதான விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/L4AngDu
0 Comments