ஹிஜாப் விவகாரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து கூறியுள்ள நிலையில், அவருக்கு மற்றொரு பாலிவுட் நடிகையான ஷபானா ஆஸ்மி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ளது அரசு பி.யூ. கல்லூரி. இந்தக் கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர், வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் திடீரென தடை விதித்தது. இந்த தடைக்குப் பின்னால் இத்துத்துவா அமைப்பு இருந்ததாக சர்ச்சை வெடித்தது. மேலும் இஸ்லாமிய மாணவிகள், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சில இந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் காவி தாவணி அணிந்து வந்தனர்.
இதனால் இந்து - இஸ்லாம் மாணவர்களால் கர்நாடாகாவில் போராட்டம் வெடித்து நிலைமை மோசமானது. இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில், மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை, கர்நாடக உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படலாம்.
ஆனால் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதற்கிடையில், போராட்டங்கள் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திங்கள்கிழமை முதல் படிப்படியாக திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 1-10 ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் ஹிஜாப் பிரச்சனை உள்ள கல்லூரிகளை திறப்பது பற்றிய முடிவு ,பின்னர் எடுக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு விதமான புகைப்படங்களை பகிர்ந்து, "ஈரான், 1973 மற்றும் இப்போது. ஐம்பது ஆண்டுகளில் பிகினி முதல் புர்கா வரை. வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் அதைத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட்டுடன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் "நீங்கள் தைரியத்தை காட்ட விரும்பினால், ஆப்கானிஸ்தானில் புர்கா அணியாமல் இருந்து காட்டுங்கள்... உங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்துக்கொள்ளாமல், விடுவித்துக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இதையடுத்து கங்கனாவின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, "நான் தவறாக இருந்தால் என்னைத் திருத்தவும். ஆப்கானிஸ்தான் ஒரு இறையச்சம் நிறைந்த நாடு. கடைசியாக இந்தியா எப்போது மதச்சார்பற்ற ஜனநாயகக் நாடாக இருந்தது?!!!" என்று கங்கனாவிற்கு தனது இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/SaWBAPp
0 Comments