Ad Code

Responsive Advertisement

”குழந்தை வேண்டாம்.. கருக்கலைப்பு செய்தேன்” போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்: சமந்தா

”கருக்கலைப்பு செய்தேன்.. நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று நடிகை சமந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார்.

சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைத்தள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார். இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்று தகவல் பரவிய நிலையில், கடந்த 2 ஆம் தேதி “நீண்ட ஆலோசனைக்கு பிறகு நானும், நாக சைதன்யாவும் கலந்து பேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று அதிகாரபூர்வமாக விவாகரத்து குறித்து அறிவித்தனர்.

image

இதனிடையே, விவாகரத்துக்குப்பிறகு சமந்தா வேறொருவருடன் காதலில் இருப்பதாகவும், குழந்தைப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும் தொடர்ந்து வதந்தி பரவி வந்த நிலையில், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமுடன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ”எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால், நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, கருக்கலைப்பு செய்துள்ளேன் போன்ற பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பது வலிமிகுந்தது. இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3agCUQm

Post a Comment

0 Comments