தடைகள் பல கடந்து தற்போது நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
வடிவேலு தன்னுடைய பிறந்தநாளை நாய் சேகர் படக்குழுவினருடன் கொண்டாடினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த பிறந்தநாள் இன்று புதிதாக பிறந்தது போல் உள்ளது. அதேபோல் பிரச்சனைகள் அனைத்தையும் கடந்து தற்போது நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலகில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும் பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டி உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “காட்டாற்று வெள்ளத்தில் போய்க்கொண்டு இருந்த தன்னை கலைத்தாய் அள்ளி எடுத்துக் கொண்டால். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. மற்றவர்களை சிரிக்க வைக்கும் இந்த வேலை எனக்கு பிடித்திருக்கிறது. குழந்தைகள் வரை என்னை தெரிந்து வைத்து, என்னை போன்றே பாவனைகள் செய்வது கடவுள் கொடுத்த வரம். திரைத்துறையில் எனக்கு போட்டி நான் தான். ஒவ்வொரு படம் நடிக்கும் பொழுதும் முந்தைய கதாபாத்திரத்தை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். எந்த சமூக வலைதளத்திலும் நான் இல்லை என் பெயரில் வெளியாகும் அனைத்து சமூக வலைதள பகுதிகளும் போலியானவை. சுராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவரிடம் முதன் முதலில் பேசிய போது என்னுடைய தீவிர ரசிகர் என உற்சாகத்துடன் பேசினார். அவருடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி” எனவும் வடிவேலு தெரிவித்தார்.
வடிவேலுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சந்தோஷ் நாராயணன், தான் ஒரு மிகப்பெரிய வடிவேலுவின் ரசிகன் என்றும் ‘வடிவேலு மிகச்சிறந்த நாட்டுப்புற பாடகர்’ என்றும் கூறினார். மேலும், “ஒவ்வொரு நாளும் அவருடைய வசனத்தையும் நகைச்சுவையும் கேட்பது வாடிக்கை. ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தில் இசை அமைக்க உள்ளது மகிழ்ச்சி. வடிவேலு இந்தியாவில் தான் ரசிக்கும் மிகச் சிறந்த கலைஞன். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த பல இயக்குனர்கள் வடிவேலு அவர்களின் தீவிர ரசிகர்கள்” என்றார்
பேச்சின் நடுவே, இயக்குனர் நலன் குமாரசாமி வடிவேலுவுக்கு ஒரு கதை வைத்திருக்கிறார் என்று சந்தோஷ் நாராயணன் சொன்னார். சந்தோஷ் நாராயணன் சொன்னதைக் கேட்ட வடிவேலு, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் அந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளது என வடிவேலு அவருக்கு பதிலளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3k0O4hM
0 Comments