
கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை தலைமை செயலகம் சென்று அளித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். நிவாரணத் தொகை அளித்ததோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அவர். தேர்தலுக்குப் பிறகு, ரஜினி - ஸ்டாலின் முதன்முறையாக நேரில் இப்போதுதான் சந்திக்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்காக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி திரட்டும் முயற்சியை சில தினங்களுக்கு முன் தொடங்கினார். இதுதொடர்பான அறிக்கையில், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது.

எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். அதனால், பொதுமக்களும் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு” வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன் வழியாக, திரைத்துறையினர் பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். அப்படித்தான் இன்று ரஜினிகாந்த் வழங்கியுள்ளார். முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் ரஜினியின் மகளும் இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த், தனது கணவர் விசாகன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்திருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uSRaHL



0 Comments